உற்பத்திகளுக்கான தரப் பரிசோதனை நிலையம் – அங்குரார்ப்பண விழாவின் முக்கிய தருணங்கள் | ஒரு புதிய தரநிலைக்கான தொடக்கம்

 


வவுனியா மாவட்டம், வட மாகாணத்தையும் ஏனைய மாகாணங்களையும் இணைக்கும் ஒரு கேந்திர மையமாகவும், போக்குவரத்து, விநியோகம் மற்றும் வணிகத்திற்கான முக்கிய மூலோபாய இடமாகவும் திகழ்கிறது. இருப்பினும், இம்மாவட்டத்தில் உருவாகும் பல தரமான உள்ளூர் உற்பத்திகள், உரிய சந்தை வாய்ப்புகளைப் பெறுவதிலும், பெரிய அளவிலான கார்ப்பரேட் நிறுவனங்களுடன் போட்டியிடுவதிலும் கடுமையான பின்னடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன.

இதன் விளைவாக, ஆரம்பிக்கப்படும் தொழில் முயற்சிகளில் 70 சதவீதத்திற்கும் மேலானவை குறுகிய காலத்திலேயே கைவிடப்படுகின்றன ஏனையவை தொடங்கிய அதே ஆரம்ப நிலையில் பல வருடங்களாக நிலைத்துப் போய்விடுகின்றன.


மேலும், பல தொழில் முயற்சிகள் தொழில்முனைவுத்தன்மையுடனான (entrepreneurial mindset) வளர்ச்சியை நோக்கி நகராமல், வெறும் வாழ்வாதாரத் தொழில்களாக மட்டுமே தொடர்வது, வவுனியா மாவட்டத்தின் மொத்த அபிவிருத்தியைப் பின்தள்ளும் ஒரு முக்கிய தடையாக மாறியுள்ளது.

இதற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்தினாலும், அதில் மிக முக்கியமானதும் அடிப்படையானதுமான காரணமாக இருப்பது:
  1. உரிய பொதியிடல் (Packaging) நடைமுறைகளைப் பின்பற்றாமை 
  2. கவர்ச்சிகரமற்ற பொதியிடல் வடிவமைப்புகளே ஆகும்.
தரமான தயாரிப்புகள் இருந்தும், அவை நுகர்வோரின் கவனத்தை ஈர்க்கத் தவறுவதால் சந்தை வாய்ப்புகள் நழுவி விடுகின்றன; அதன் மூலம் வளர்ச்சி வாய்ப்புகளும் தடைப்படுகின்றன.



மேற்கூறிய சவால்களுக்கு தீர்வு காணும் நோக்குடன், விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் வவுனியா மாவட்ட விதாதா வள நிலையமும், வவுனியா பல்கலைக்கழகமும் இணைந்து, பூங்கா வீதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழக வளாகத்தில் VALID (Verification of Accuracy & Learning for Innovation and Development) எனும் உற்பத்தி தரப் பரிசோதனை நிலையம் (Product Testing Centre) ஒன்றை ஆரம்பித்துள்ளது. இந்த நிலையத்தில், உற்பத்திகளுக்கான
  1. சீனி (Sugar)
  2. கொழுப்பு (Fat)
  3. உப்பு (Salt)

ஆகியவற்றின் அளவுகளை அறிவியல் முறையில் பரிசோதித்து, உணவு சார் பொதியிடல்களுக்கான Colour Code-ஐ பெற்றுக்கொள்ள முடியும். மேலும், உணவு உற்பத்திகளில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் (Nutritional Values) தொடர்பான பரிசோதனைகளையும் மேற்கொண்டு, அதற்கான உத்தியோகபூர்வ அறிக்கைகள் (Official Test Reports) - ஐ பெற்றுக்கொள்ளலாம். இச் சேவைகள் கட்டண அடிப்படையில் வழங்கப்படுகின்ற போதிலும், இதற்கான முழுமையான ஆய்வுகூட வசதிகளும், தகுதி பெற்ற உரிய உத்தியோகத்தர்களும் வவுனியா பல்கலைக்கழகத்தினால் நியமிக்கப்பட்டு செயல்படுகின்றனர். இந்த பரிசோதனை முடிவுகள் மற்றும் சான்றிதழ்களை பொதியிடல் வடிவமைப்பிற்குள் (Packaging Design) உள்ளடக்குவதன் மூலம், உள்ளூர் உற்பத்திகள்: 

  1. பெரிய அளவிலான நிறுவனங்களின் உற்பத்திகளுடன் போட்டியிடும் ஆற்றலைப் பெறுவதுடன்,

  2. சான்றுறுதிப்படுத்தப்பட்ட தரநிர்ணயத்தையும் (Certified Quality Standard) தங்களுக்கென உருவாக்கிக் கொள்ள முடியும்.

இதன் மூலம், உள்ளூர் சந்தைக்கு மட்டுமன்றி, தேசிய மற்றும் சர்வதேச (Export) சந்தைகளுக்கான வாய்ப்புகளும் திறந்து விடப்படுகின்றன.


இந்த உற்பத்தி தரப் பரிசோதனை நிலையத்தின் ஆய்வுகூட அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றைய தினம் (23.01.2026) அன்று காலை 09:00 மணி தொடக்கம் 02:30 மணி வரை சிறப்பாக இடம்பெற்றது. இந்த நிகழ்வு மாண்புமிகு கிரிஷாந்த அபேசேன (விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்) மற்றும் மாண்புமிகு சுனில் ஹந்துன்னெத்தி (தொழில் மற்றும் தொழில்முனைவுத் திறன் மேம்பாட்டு அமைச்சர்) ஆகியோரால் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இதில் மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு. மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் மற்றும் மாண்புமிகு டாக்டர் செல்லத்தம்பி திலகநாதன், வவுனியா பல்கலைக்கழகத்தினுடைய வேந்தர் மற்றும் துணவேந்தர், வவுனியா பல்கலைக்கழக கல்வியலாளர்கள், மாவட்ட மற்றும் மாகாண மட்ட உயர் அதிகாரிகள், வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பெருந்தொகையில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். 


மேலும், இந்த நிகழ்வின் ஒரு முக்கிய அம்சமாக, பாடசாலை மாணவர்கள் மற்றும் வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த தொழில்நுட்பக் கண்காட்சி ஒன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்; அந்தக் கண்காட்சி, இளம் தலைமுறையின் புதுமை சிந்தனைகளையும் அறிவியல்–தொழில்நுட்ப திறன்களையும் வெளிப்படுத்தும் ஒரு ஊக்கமளிக்கும் மேடையாக அமைந்தது.


மேலும், வவுனியாவின் மிகச் சிறந்த தொழில்முயற்சியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டு, அவர்களுக்கான சந்தை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கப்பட்டதுடன், அதே நேரத்தில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக கல்வியலாளர்கள், அரச உயர் மட்ட அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு தமது தொழிற்துறையினை நேரடியாக வெளிப்படுத்தும் மதிப்புமிக்க வாய்ப்பும் வழங்கப்பட்டது. இவ்வகையான தொழிற்துறைகளை மாணவர்கள் நேரில் காண்ந்து அனுபவிப்பதன் மூலம், அவர்களும் எதிர்காலத்தில் தொழிற்துறைகளைத் தெரிவு செய்யவும், தொழில்முயற்சியாண்மையில் ஈடுபடவும் ஊக்கமளிக்கும் ஒரு முக்கிய வாய்ப்பாக இது அமைந்தது. மேலும், தெரிவு செய்யப்பட்ட 10 தொழில்முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு இலவசமாக தரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான உத்தியோகபூர்வ அறிக்கைச் சான்றிதழ்கள் நிகழ்வின் போது கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


மொத்தத்தில், இந்த உற்பத்தி தரப் பரிசோதனை நிலையத்தின் அங்குரார்ப்பணம், வவுனியா மாவட்டத்தின் உள்ளூர் தொழில்முயற்சியாளர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையும் வளர்ச்சி வாய்ப்பும் அளிக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தொடக்கமாக அமைந்தது. தரச் சான்றுகள், பொதியிடல் மேம்பாடு மற்றும் சந்தை அணுகல் வாய்ப்புகள் மூலம் உள்ளூர் உற்பத்திகளை தேசிய மற்றும் சர்வதேச மட்டத்துக்கு உயர்த்தும் ஒரு வலுவான அடித்தளமாக இது திகழ்கிறது. அதேவேளை, இளம் தலைமுறையை தொழில்முயற்சியாண்மையின்பால் ஈர்க்கும் ஊக்கமளிக்கும் மேடையாகவும் இந்த முயற்சி உருவெடுத்துள்ளது. இந்த முக்கிய முயற்சியை நடைமுறைப்படுத்துவதில் முன்னணிப் பங்காற்றிய வவுனியா பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும், கல்வியலாளர்களுக்கும், மேலும் விதாதா வவுனியா மாவட்ட வள நிலையத்தின் மாவட்ட உத்தியோகத்தர் மற்றும் அவரது குழுவினருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்நிலையம், வவுனியாவின் தொழில் அபிவிருத்திக்கு ஒரு மைல்கல்லாக இருந்து, எதிர்காலத்தில் பல புதிய வெற்றிக் கதைகளுக்கான தொடக்கமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Documented By: North Brands | 0770567256


No comments

Powered by Blogger.